மரத்துடன் கட்டிப்பிடி வைத்தியம்: கட்டணம் ஜஸ்ட் ரூ.1,500: சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு நிறுவனம்!
மரங்களைக் கட்டிப் பிடித்து உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ரூ.1,500 கட்டணம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று.
சமீபகாலமாக உடல் நோய்களுக்கு இணையாக மக்களை அதிகளவில் பாதிக்கும் ஒன்றாக இருப்பது மன அழுத்தம். போதிய உடல் உழைப்பு இல்லாமை, அதிக வேலைப்பளு, வாழ்க்கை முறை மாற்றம், பாஸ்ட் புட்களின் ஆதிக்கம், போதிய தூக்கமின்மை, இயந்திரத்தனமான வாழ்க்கை, பொருளாதாரப் பிரச்சினை, செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு என மன அழுத்தம் உருவாக பல காரணங்களை அடுக்கலாம்.
எந்த நோய்க்காக மருத்துவரிடம் சென்றாலும் அவர்கள் முதலில் கேட்பது, ‘நன்றாக தூங்குகிறீர்களா? ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறீர்களா?’ என்பதுதான். அதனாலேயே காசு கொடுத்தாவது மன அமைதியை வாங்கும் அளவிற்கு மனிதர்கள் வந்து விட்டனர்.
வெளிநாடுகளில்கூட இதற்கென பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிக சோகம் மற்றும் மன அழுத்தத்துடன் வருபவர்களுக்கு அழுவதற்கென்றே தனி அறைகள், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கையில் கிடைத்ததை எல்லாம் உடைக்கும் அறைகள், சவப்பெட்டிக்குள் படுத்து அமைதியை உணர்வது என டிசைன் டிசைனாக மக்களைக் கவரும் வகையில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கட்டிப்பிடி வைத்தியம்
சமீபகாலமாக இது போன்ற நிறுவனங்களின் உதயம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களைக் குறி வைத்தே இது போன்ற நிறுவனங்கள் உதயமாகின்றன. தற்போதும் அப்படித்தான் கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயரில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ரூ.1500 என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று.
‘வனக்குளியல்’ என்ற பெயரில் இந்நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு டிக்கெட்டிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம்.
`A Forest Bathing Experience’ என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ள விளம்பரத்தில் 18% ஜிஎஸ்டியுடன் சேர்த்து, மரத்தைக் கட்டிப் பிடிக்க 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஜப்பானிய முறை
இது ஒரு ஜப்பானிய முறைப்படியான ஹீலிங் ஆகும். ஷின்ரின் யோகு (Shinrin Yoku) என அழைக்கப்படும் இதனை வனக் குளியல் (Forest Bathing) எனவும் குறிப்பிடுகின்றனர். அதாவது, நகரமயமான வாழ்க்கையில் இருந்து தப்பித்து, பரபரப்பில்லாத, அமைதியான வனத்திற்குள் மெதுவாகவும் அமைதியாகவும் நடந்து சென்று, மரங்களைத் தொட்டு, கட்டித் தழுவி என இயற்கையோடு நேரத்தைச் செலவழிப்பதே இந்த ஷின்ரின் யோகு ஆகும்.
இந்த சேவையைத் தான் தற்போது சம்பந்தப்பட்ட பெங்களூரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் மையப்பகுதியில் விதானசவுதா (கர்நாடகா சட்டசபை) மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சுற்றிப் பரந்து விரிந்துள்ள கப்பன் பார்க் பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் தோட்டக்கலைத்துறை மற்றும் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஜஸ்ட் ரூ.1,500 மட்டுமே
இந்த கப்பன் பார்க்கில் உள்ள மரத்தை கட்டிப்பிடித்து, ஆழ்ந்த, அமைதியான மற்றும் ஆத்மார்த்தமான நடைப்பயிற்சி மேற்கொள்ளவே இந்த ரூ.1,500 என்ற கட்டணத்தை அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது இயற்கையோடு மீண்டும் இணைவதற்கும் மன அமைதியைக் மீட்டெடுப்பதற்கும் வாய்ப்பளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக அந்நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “நகரத்தில் நமது அன்றாட வாழ்க்கை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து விலகி மன அமைதியை தருகிற விதமாக இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்தையும் இடத்தையும் கண்டுபிடிப்பது நகரத்தில் மிகவும் சவாலான ஒன்று. இதற்குத்தான் ஜப்பானியக் கலையான வனக் குளியல் என்பது ஒரு நல்ல அனுபவமாகும். இது காடுகளுக்குள் ஒரு ஆழ்ந்த, அமைதியான மற்றும் ஆத்மார்த்தமான நடைப்பயிற்சியாகும். இதன்மூலம் நீங்கள் புத்துணர்வுடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள்,” எனத் தெரிவித்துள்ளது.
புது வித மோசடி
இந்த வனக்குளியல் விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பணம் செலுத்தியுள்ளனரா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த விளம்பரம் ஒரு புதுமாதிரியான மோசடி எனப் பலர், விளம்பரத்தை குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விளம்பரத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ஒருவர், தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, "பேபி எழுந்திரு! மார்க்கெட்டில் ஒரு புதிய மோசடி உள்ளது...’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசனோ, ‘இது புதுவித மோசடியாக இருக்கிறதே’... கட்டணம் வெறும் 1,500 ரூபாய் என குறைவாக இருக்கிறது, இன்னும் கூடுதலாகக்கூட வாங்கலாம்’ எனக் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.