சாமானியன் டு செலிபிரிட்டி: புர்ஜ் கலீஃபா உச்சியில் காபி குடித்த டோலி சாய்வாலா வீடியோ வைரல்!
மைக்ரோசாப்ட் பில்கேட்ஸை சந்தித்ததன் மூலம் பிரபலமான நாக்பூர் சாய்வாலா டோலி, தற்போது புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் அமர்ந்து காபி சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்பெல்லாம் ஏதாவது தொழிலில் அல்லது துறையில் சாதித்தவர்கள்தான் பிரபலங்களாக மக்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால், இப்போதோ சமூகவலைதளங்களில் ரீல்ஸ் அல்லது வீடியோ போட்டே சாமானியர்கள்கூட பிரபலமாகி விடுகின்றனர்.
எல்லோர் கையிலும் செல்போன், லேப்டாப் என தொழில்நுட்ப வசதியும் எளிதாகக் கிடைப்பதால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.
அப்படி தனது பிரத்யேக டீ வீடியோக்கள் மூலம் இணையத்தில் பிரபலமானவர் தான் நாக்பூரைச் சேர்ந்த டோலி சாய்வாலா. பல வருடங்களாக டீக்கடை நடத்தி வரும் இவர், தனது தனித்துவமான தேநீர் தயாரிக்கும் வீடியோக்கள் மூலம், டோலி சாய்வாலா என சமூகவலைதளங்களில் பிரபலமானார்.
யார் இந்த டோலி சாய்வாலா?
டோலி நாக்பூரைச் சார்ந்தவர். நம்மூரில் தள்ளுவண்டி கடை எனக் கூறுவோமே, அது போன்ற ஒரு டீக்கடையைத்தான் அவர் நடத்தி வருகிறார். நாக்பூரில், ரவீந்திரநாத் தாகூர் மார்க் அருகே சாலையில் ஒரு வண்டியில் டீ தயாரிக்கும் உபகரணங்களை வைத்து, பல வருடங்களாக டோலி டீக்கடை நடத்தி வருகிறார்.
ஒல்லியான தேகத்துடன் தலை முடிக்கு ரோஸ் கலர் வண்ணம் தீட்டி, பாலிவுட் நடிகர் போன்ற உடையுடன், வித்தியாசமான முறையில் ஸ்டைலாக டீ தயாரிக்கும் டோலி சாய்வாலாவின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ரொம்பவே பிரபலம். நாக்கை துருத்திக் கொண்டு, பால் பாக்கெட்டை உயர தூக்கி அவர் பால் பாத்திரத்தில் அதனை ஊற்றும் ஸ்டைலுக்கென்றே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அவரது தனித்துவமான இந்த தேநீர் தயாரிக்கும் வீடியோக்களைப் பார்த்து பல திரைத்துறை மற்றும் சமூகவலைதளப் பிரபலங்கள் இவரது கடைக்கு டீ குடிக்க வர ஆரம்பித்தனர். இதன்மூலம் மேலும் பிரபலமானார் டோலி சாய்வாலா. அதன் தொடர்ச்சியாக அவரது ஒவ்வொரு வீடியோக்களுமே மில்லியன்களில் பார்வைகளைப் பெறத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில்தான், இவரது வீடியோக்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கவனத்திற்கு சென்றது. எனவே,
கடந்த மார்ச் மாதம் தனது இந்திய பயணத்தின் போது டோலியை நேரில் சந்தித்தார் பில்கேட்ஸ். இதற்காக பிரத்யேகமாக நாக்பூரில் இருந்து ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார் டோலி சாய்வாலா.
அங்கு அவரது டீக்கடை மாதிரியே ஒரு டீக்கடை அமைத்துத் தரப்பட்டது. அதில் தனது ஸ்டைலில் டோலி சாய்வாலா, பில் கேட்ஸுக்கு டீ போட்டுக் கொடுத்தார். ‘One chai please' என பில்கேட்ஸ் கேட்பதிலிருந்து தொடங்கும் அந்த வீடியோவை பில்கேட்ஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, சர்வதேச அளவில் மேலும் பிரபலமானார் டோலி. வழக்கம் போலவே இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஹிட் அடித்தது.
புர்ஜ் கலீஃபாவில் ஒரு சாய்
இந்த நிலையில் டோலி சாய்வாலா கடந்த வாரம் துபாயில் உள்ள மிகவும் பிரபலமான கட்டடமான, “புர்ஜ் கலீஃபாவில்” இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் காரில் சகல மரியாதையுடன் புர்ஜ் கலீஃபாவிற்கு அழைத்து வரப்படும் டோலி, அங்கு 148வது மாடிக்குச் சென்று, துபாயை பார்வையிடுவது போலவும், பின்னர் அங்கே அமர்ந்து காஃபி அருந்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டோலி சாய்வாலா,
“ஒரு காபி சாப்பிட புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு சென்றேன்...” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
தென்னிந்திய படங்களின் தாக்கம்
தான் இப்படி பிரபலமானது குறித்து கூறுகையில்,
”தென்னிந்திய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றைப் பார்த்துதான் நான் பல ஸ்டைல் விசயங்களைக் கற்றுக் கொண்டேன். அதைத்தான் எனது வீடியோவில் பயன்படுத்துகிறேன்,” என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் டோலி.
அவர் கூறியதுபோலவே, அவரது பல ரீல்ஸ்களுக்கு தமிழில் டிரெண்டிங்கான பாடல்கள் மற்றும் அதன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பில்கேட்ஸை சந்திப்பதற்கு முன்பு வரை ஆயிரங்களிலும், லட்சங்களிலும் மட்டுமே இருந்த டோலியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை தற்போது மில்லியன்களில் உள்ளது. டோலியின் இன்ஸ்டா பக்கத்தை மட்டும் சுமார் 3.1 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.