இளம் ஓட்டுனர்களுக்கு பயிற்சி: ஐஐடி மெட்ராஸ் - ஃபோர்டு இணைந்து புதிய திட்டம்!
ஐஐடி மெட்ராஸின், சாலை பாதுகாப்பிற்கான உயர்திறன் மையம் (CoERS) ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து இளம் வாகன ஓட்டுனர்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க உள்ளது.
ஐஐடி மெட்ராஸின், சாலை பாதுகாப்பிற்கான உயர்திறன் மையம் (CoERS) ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து இளம் வாகன ஓட்டுனர்கள் மத்தியில் விபத்துகள் அதிகரிப்பதை எதிர்கொள்ளும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 240 பள்ளிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வல்லுனர்கள் கொண்டு, சாலை பாதுகாப்பு மற்றும் வாகனம் ஓட்டும் திறன் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட, 2022ல் இந்தியாவில் சாலை விபத்துகள் அறிக்கையில் மொத்தம் நிகழ்ந்த 1,68,491 மோசமான விபத்துகளில் 42,878 விபத்துகள் 25 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் தொடர்புடையது என தெரிவிக்கிறது.
இந்த பின்னணியில் இளம் வயதினர் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமாகிறது. மாணவர் பருவத்திலேயே சாலை பாதுகாப்பு பற்றி கற்றுத்தருவது, பாதுகாப்பு அம்சத்தை முதன்மையாக கருத வைக்கும்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு பயிற்சி அளிக்க உள்ளது. ஐஐடி மெட்ராசில் உள்ள CoERS மற்றும் ஃபோர்டு நிறுவனம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
.
இந்த திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள் அதன் பிறகு தங்கள் பகுதியில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இளம் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்து சாலை பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சியுடன் ஆகஸ்ட் 30ம் தேதி ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் துவக்க பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
“பல்வேறு திட்டங்கள் வாயிலாக சமூக மாற்றத்திற்கு வித்திடுவதில் ஐஐடி மெட்ராஸ் ஈடுபாடு கொண்டுள்ளது. இளம் வயதினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தை வலுவாக்கலாம். இந்த திட்டம் நாளைய தலைமுறையினர் மத்தியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அமைகிறது,” என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள், போக்குவரத்து வார்டன்கள், போக்குவத்து காவலர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மனித பழக்கவழக்க பார்வையில் சாலை பாதுகாப்பை அணுகுவதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
“இளம் வயதில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாலை பாதுகாப்பிற்கு உதவும் என்று, ஐஐடி மெட்ராஸ் CoERS தலைவர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
“சாலை பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்க, ஆசிரியர்களை தயார்படுத்துவதன் மூலம், மாணவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை கொண்டிருப்பதை உறுதி செய்வது எங்கள் நோக்கம் என்று ஃபோர்டு சி.எஸ்.ஆர் பிரிவு தலைவர் ஸ்ரீனிவாசன் ஜானகிராமன் தெரிவித்தார்.
Edited by Induja Raghunathan