கொரோனா தடுப்புக்கு திருமண சேமிப்பை நன்கொடை வழங்கிய புதுமணத் தம்பதி!
ஜோதி ரஞ்சன், ரோஜலின் தம்பதி எளிமையாக திருமணத்தை நடத்தி பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி உதவியுள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் எத்தனையோ நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்காமல் தள்ளிப்போடப்பட்டது. குறிப்பாக நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் பலவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகளாவில் ஒன்றுகூட அனுமதியளிக்கப்படாத நிலையில் பல திருமண நிகழ்வுகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ரஞ்சன் ஸ்வைன், ரோஜலின் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண செலவுகளுக்காக ஒரு தொகையை ஒதுக்கியிருந்தனர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக அதிக செலவின்றி தங்கள் திருமணத்தை நடத்திக்கொள்ளத் தீர்மானித்தனர். அந்தத் தொகையை சேமித்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

மாப்பிள்ளை ஜோதி ரஞ்சன், எரசமா பிளாக்கில் வசிப்பவர். பொதுமக்கள் நிவாரண நிதிக்கு இந்தத் தம்பதி 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். விமரிசையாக திருமணத்தை நடத்த திட்டமிருந்த இவர்கள் அந்தத் தொகையை பொதுநலனுக்காக செலவிட்டுள்ளனர்.
“திருமணத்தை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்தும் தடைபட்டது. எனவே திருமண ஏற்பாடுகளுக்காக சேமித்திருந்த தொகையின் ஒரு பகுதியை கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கத் தீர்மானித்தோம்,” என்று `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் ஜோதி ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதி அருகிலிருக்கும் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளர் பிரசாந்த் குமார் மஜி, எரஸ்மா பிளாக் மேம்பாட்டு அதிகாரி கார்த்திக் சந்திர பெஹரா ஆகியோரை அழைத்தனர். பெஹராவிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒதுக்கப்பட்ட 10,000 ரூபாய்கான காசோலையை ஒப்படைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“அதிக மக்கள் கூடவில்லை. அந்தத் தம்பதி எளிமையான முறையில் நிகழ்ச்சியை நடத்தி இனிப்புகளை வழங்கினார்கள்,” என்று பெஹரா தெரிவித்ததாக அவுட்லுக் குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA