Stock News: மீண்டெழத் தொடங்கும் பங்குச் சந்தை - காரணம் என்ன?
சர்வதேச வர்த்தகப் போக்கு உள்ளிட்ட காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தைகள் வெகுவாக மீண்டெழுந்துள்ளன. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டுள்ளன.
சர்வதேச வர்த்தகப் போக்கு உள்ளிட்ட காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தைகள் வெகுவாக மீண்டெழுந்துள்ளன. சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.12) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 428.83 புள்ளிகள் உயர்ந்து 81,951.99 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 154.1 புள்ளிகள் உயர்ந்து 25,072.55 ஆக இருந்தது.
இதனால், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்துள்ளது. சமீப காலமாக தடுமாற்றப் போக்கால் கலக்கத்தில் இருந்த நிலையில், இப்போது பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டெழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.
முற்பகல் 10.50 மணியளவில் சென்செக்ஸ் 207.59 புள்ளிகள் (0.25%) உயர்ந்து 81,730.75 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 84.50 புள்ளிகள் (0.14%) உயர்ந்து 25,002.95 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் நல்ல முன்னேற்றத்துடன் நிறைவடைந்தது. தற்போது சியோல், டோக்கியோ, ஹாங்காங் முதலான ஆசிய பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவுகிறது. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் தாக்கம் தந்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் பணவீக்கம் சற்றே குறைந்ததன் காரணமாக, வட்டி விகிதத்தை கொஞ்சமாக குறைத்திருக்கிறது அமெரிக்க ஃபெடரல் வங்கி. இதன் எதிரொலியாக, பங்குச் சந்தைகளில் முதலீடு கூடத் தொடங்கியுள்ளது. அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளின் காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
அதானி போர்ட்ஸ்
பாரதி ஏர்டெல்
டெக் மஹேந்திரா
கொடாக் மஹேந்திரா
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
நெஸ்லே
பஜாஜ் ஃபின்சர்வ்
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு ரூ.83.97 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan